34 - ஆளவந்தார்
34 - ஆளவந்தார் யமுனைத்துறைவர் புன்னகையோடு, “நிச்சயமாக முடியும் அரசே! லௌகீமாகவும், தர்ம சாஸ்திர விதிகளின்படி அடியேன் அந்த மூன்று வாக்கியங்களையும் மறுத்துக் காட்டுகிறேன், கேட்பீராக!” என்று தொடர்ந்தார். “முதலாவது வாக்கியம்: வாழையானது தன் வாழ்நாளில் ஒரேயொரு குலையை மட்டும் ஈன்றுவிட்டு மடிவது போல, இந்த வித்துவானின் தாயும் இவரொருவரை மட்டுமே பெற்றெடுத்துள்ளார். உலக வழக்கிலே, 'ஒரு பிள்ளையானது பிள்ளையல்ல, ஒரு மரமும் தோப்பல்ல' என்று சொல்லுவது உண்டு அல்லவா? அப்படி ஒரேயொரு வாரிசைப் பெற்றெடுத்த தாயை, உலக வழக்கிலே ‘வாழை மலடு’ என்றே வேடிக்கையாகக் குறிப்பிடும் மரபு உண்டு. அதனால் ஒரேயொரு புதல்வனைப் பெற்ற தாயை உலக வழக்கின்படி மலடி என்று மறுத்து உரைக்கலாம்! அதுமட்டுமல்லாமல், ‘அபுத்ரஸ்ய கதிர்நாஸ்தி’ (புத்திரன் இல்லாதவனுக்கு நற்கதி இல்லை) என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. உலகத்தில் தாய் தந்தையர் தங்களுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்றே தவமிருந்து பிள்ளையைப் பெற்றெடுக்கிறார்கள். அப்படியிருக்க, மகனாகப் பிறந்தவன் பெற்றோருக்கு நற்கதியளிக்கும் நற்குணங்கள் இல்லாதவனாய் வீணே வாழ்வைக் கழித்தால், அவர்களுடைய எண்ண...